*ஓவியம் - AI

 'மயிலியப்புலக்குளம் பற்றிய​ நினைப்பு ' மனதில் வட்ட​ அலைகளை ஏற்படுத்த​ ,​ ஏக்க​ மூச்சுக்கள்   புகையாய் எழ​ அந்த​ செந்தாமரைக்   கிராமம் ...சித்திரமாக​ விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட​ கோப்புகளை வைத்துக் கொண்டு பல​ விசயங்களை சாதித்து வருகிறது  , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான   மேடை ஒன்றை  அமைப்பதற்கான​​ நிதி சேகரிப்புக்காக​​ உப​ அரசாங்க​ முறையிலான​ சிரமதானம்  நடைபெற்றது , அந்த​ குளத்தில் சிறிதளவு கனமண்ணை  வெட்டிய​ போது ,  செவ்வேலும்   வேல்முருகு , பரமானந்தம் ...​ அவன் என  வகுப்பு தோழர்கள் பலருடன்  கூடையில் மண்ணை ஒருத்தர்  ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது .  அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான​ தேனீர்ச்செலவை  கொடுப்பர் , அவ்வலுவலகத்தில்  வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த​ தவபாலண்ணரின்  புத்தியில்  உதித்த   புத்திசாலித்தனம் .  தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர்   . கிடைக்கிற​ பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும்  அதற்கு  நிதியளிக்க​ சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான​ திட்டங்கள்  வெற்றி பெற முடியாது  .  கிராமத்தின் தலையாய​ கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .

வந்ததிலிருந்து , இவன்  ,  அடிக்கடி   இப்படியே கிராம​ நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன் . ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ' மதம் பிடித்தது போன்ற​ அந்த​ உன்மந்தம் பிடித்ததோ ? '..., தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே  செல்கிறது . 'பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்' என்ற​ செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது .' இனப்பகை' என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத​ வியாதி , மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற​  ஒன்றாக​ . காந்தியின் அகிம்ஷை , புத்தரின் ஞானம் , யேசுவின் நேசம் , இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற​ அறுந்த​ இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் . பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல் ,  கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற​ கிரீக் அரசைப் போல​ , ஈழத்திலும் கொன்ற​ ...ஒரு மாற்றப்பட​ வேண்டிய​ அரசியலாகக்​ கிடக்கிறது .

உலகத்தில் கிரிக்கெட் மாட்ச் போல​ நாடுகளிலும் இனப்படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன . வெளிக்கு ..இப்படி தெரிந்தாலும் பின்னணியில் சில​ பெரிய​ சக்திகள் இருப்பதும் தெரியாததல்ல​ . சோரம் போன​ கிழட்டு நாடு இது , இஸ்ரேல் போன்று ...நிறுத்தப்படும் போல​ தோன்றவில்லை . தொடர்கதையாய் வேதனையை விதைக்கிறது . நடத்தியவர்களை வரும் ஆட்சியாளர்   கெளரவம் குலைந்து விடும் போல​    பகிரங்கப்படுத்தாமல் , தீர்வுகளை முன் வைத்தது ,சீரமைப்பு செய்யாமல் , அவர்தம் மேல் தூசி கூட​ படிய​ விடாது ...கடந்து விடுகிறது . பழைய​ பெருஞ்சாலிகளின் சிலைகள் நகரமெங்கும் . படையினர் அவற்றை வடக்கு  , கிழக்கிலும் நிறுவி விட​ ,  இருக்கிற​ அழகான​ இடங்களுக்கும்  தமிழ்ப்பெயர்களுக்கு சிங்களப்பெயர்களையும் இட்டு உளவியல் ரீதியிலும் சித்திரவதை புரிகிறது . புதிய​ ஆட்சியினர் சில​ நல்லாட்சி நிலவ​ விரும்புகிறது . ஒப்புக் கொள்கிறோம் . ஆனால் , பழையதைக் கிளறுவதால் செய்யக் கூடிய​ நல்லதையும் செய்ய​ முடியாமல் போய் விடுகிறது ...என​ மாறுகண் கொள்வது , பாதிக்கப்பட்டவர்களுக்கு தவிர்க்க​ முடியாமல் சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது . மாகாண (வரசு) ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தான் சிறந்த​ வழி . ஆனால் , உள்ளூராட்சி தேர்த்தலின் போதே மாகாணவரசு தேர்த்தலையும் நடத்தி விடுவது செலவை அரைவாசியாக்கி விடும் . ஆனால் , நடத்த பணமில்லை என​ கையை விரிப்பது கடந்த​ ஆட்சியாளரைப் போலவே ...கடத்தி விடுற​ உத்தி . ​ நீதிமன்றத்தை மதியாது எழுந்த​ விகாரைக்கு , மடத்திற்கு ....பேசித் தீர்க்கச் சொல்வது ....எல்லாம் பள்ளமும் , குழியுமாக​ கிடக்கிற​ வழமையான​பாதையையே காட்டுகிறது . பேச்சு மட்டும் போதாது , செயலிலும் நடை போட​ வேண்டும் . உணர்வார்களா? . இவர்களின் இந்திய​ எதிர்ப்புக் கொள்கை மறுதலையாக​ மலையக மக்களையே  வருத்தி வருகிறது . தற்போதைய​ தலைவர் , மலையக​ மக்களைப் பற்றி உருக்கமாக​ பேசியுள்ளார் . 'அவர் இதயபூர்வமாக​ பேசுகிறார் ' தெரிகிறது . ஆனால் கட்சி ???

பல்கணியில் இருந்து கட்டடக்காடு ....., இல்லை கட்டடகூடுகளைப்பார்த்துக் கொண்டு இப்படி எதையோ நினைத்துக்கொண்டு ​ நின்ற​ போது '' செவ்வேல் , தெரியுமா செய்தி , உன்னுடன் படித்தவனாக​ இருக்க​ வேண்டும் , வேல்முருகு இன்று காலை இறந்து விட்டான் ...முகநூலில் பார்த்தேன் '' என்று தம்பைய்யா அலைபேசியில் தெரிவித்தான் . அதிர்ச்சியாய் இருந்தது . அவனும் முகநூலை ஏற்படுத்திக் கொள்ள​ வேண்டும் என நினைக்கிறான் .  ஏற்படுத்திக் கொள்ளவில்லை . ' வாட் அப் ' உடன் நிறுத்திக் கொண்டிருக்கிறான் . அதனூடாக​ நண்பர் சிலர் முகநூல் விபரங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் . அகதியானவனின் வாழ்வில் தான்  எத்தனை மிகுதியான​ குழப்பங்கள்   . பெல்கணியிலிருந்து வீதியை , கட்டடங்களை , மனிதர்களை , நாய்க்குட்டிகள் இழுத்துச் செல்லுபவர்களைப் பார்க்கிறான் . மழைத் தூரல்களை யாருமே லட்சியம் செய்யவில்லை . இருண்டு பெருமழை வரும் அறிகுறியில்லை . தீடீரென​ வருமா , வராதா என்பதற்கு அவ்வளவு தான் மரியாதை . தூரத்தே இடி முழங்கி அடங்கிறது . இதயம் விம்மி அடங்கிறது. உள்ளே கிடக்கிறதை கை எழுதத் துடிக்கிறது .​ அழுகையை இறக்கி வைக்க​ வேற​ வழி இல்லையே  . வாழ்க்கை இவ்வளவு தானா? .

'முருகு பற்றி  வட்ட​  , வட்ட   நினைவுகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன .  உள்ளே சென்றவன் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்கிறான் .

சட்டம்பியார் கதிரேசுப்பிள்ளை தம் பெடியள்களுக்கெல்லாம் கதிர்முருகு , செம்முருகு , வேல்முருகு ...என​ முருகுவில் காதல் கொண்டு பெயரை வைக்க​ , பெடிச்சிகளுக்கு கமலமணி , சிவமணி என...​ மனைவியின் சுந்தரமணி  இல் மணியையும் சேர்த்து ​ வைத்திருக்கிறார் .  குடும்பம் ஒரு கதம்பம் . வீட்டிலே மூன்றாவது பையன் வேல்முருகு , செவ்வேலும் வீட்டில்   மூன்றாவது  பிள்ளை தான்​ .

செவ்வேல்  ,  வகுப்பிலே புதிதாய்​ நுழைந்த​ போது , '' வந்தான் வரத்தான் ''   என்று முதலில்  வேல்முருகுவே முகமன் கூறி வரவேற்றான் . பகிடியானவன் . கண்ணில் ஒரு சிரிப்பு .''இதற்கு  என்ன​ அர்த்தம் ? '' என்று செவ்வேல் கேட்க '' இந்த​ கிராமத்தை அடியாகக் கொள்ளாதவர்களை   சொல்லுறது " என்றான் . இப்ப​ , வடக்கு , கிழக்குக்கு சிங்களவர்ளும் 'வந்தான் வரத்தான்கள் ' . இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிற​ கதையாய் என்ன​ ஆட்டம் போடுறார்கள் . ஆனால் , அன்று  இவர்களுக்கு கலவரம் நடைபெற்றிருப்பதையே தெரியாத​ , தொடர்ந்தும் நடைபெற​ இருப்பதை புரியாத​ பாலர்பருவம் . அந்நேரம் 12 - 13 வயதுடையவர்களை வேற​ எப்படிச் சொல்வது ? . செவ்வேலின் அம்மாவிற்கு ஆசிரியப் பணியில் மாற்றம்  கிடைத்து கிராமத்துக்கு வருகிறார் . கூடவே  வருகிற  அவர்களில் அவனும் தங்கைமாருமே அதே பள்ளிக்கூடத்திற்கு படிக்க​ வருகிறார்கள்  .

செந்தாமரைக்  கிராமபள்ளிக்கூடத்தின்   முகப்பு கதவைத் திறந்தவுடன் விளையாட்டு மைதானம் பிறகே கட்டடங்கள் . இரண்டு கட்டடங்கள் நேர்கோட்டில் , நெசவுடன் கூடியது ...கொஞ்சம் முன் தள்ளி,  நெசவுக்குப் பின்னால் மேடை அமைத்து கலைவிழா நடத்தக் கூடிய​ நிலம் . வேலியோரம் ஆண் , பெண் பிரிவு​ கழிப்பிடம் . வீதியோடு அண்மித்திருந்த  முதலாவது நாற்சாரமுடையது .   ஒரு ​ நீளத்தில் அதிபரின் அறை , இரசாயன​ ஆய்வுகூடம்  , நூலகவறை ( பாவிப்பில் இருக்கவில்லை)  என​  இருக்க​ , அடுத்த​ மூன்று பக்கங்கள் அரைச்சுவர்களுடன் ....6  -  10...வரையிலான​  வகுப்புகள்  பிரிப்புப் பலகையுடன் காணப்பட்டன​ . ஒவ்வொன்றும்  20 - 25 பேர்களை கொண்டவை . எல்லாத்திலும் அரைக்கரைவாசி பேர்கள் பெண்கள்  . நடுவிலிருந்த​ மண்தரையில் ஒரிரண்டு செவ்வந்திச் செடிகள் சிலிர்த்து பூத்திருந்தன​ .

இக்கட்டத்திற்குப் பக்கத்தில் கிணறுடன் கூடிய​ சிறிய தோட்ட​ நிலம் .அடுத்ததாக​ மற்றைய​ கட்டடம் ஒரு பெரிய​ மடம் போல​  சுற்றிவர​ அரைச்சுவருடன் உள்ளே பிரிப்புகளுடன் ..வகுப்புகள் , ஒரு பக்கம் சிறிய​ மேடைக்கட்டமைப்பு​ இருந்தது . ஒவ்வொரு நாளும் அங்கே மாணவர் எல்லாரும் கூடி​ தேவாரம் திருவாசகம் பாடுறது , ஆசிரியர் எவரின் பேச்சுகளும் நிகழ்தேறுற​ அசெம்பிளி மடமாகவும் இருந்தது . அச்சமயல் பலகை தடுப்புகளை அகற்றி விடுவர்.  சரஸ்வதி பூஜை எல்லாம் அங்கேயே நடைபெற்றன​ . நாடகம் , சங்கீதம் கலந்த​ பக்திப்பாடல்கள் , நடனம் எல்லாம் கூட​  பூஜை காலத்தில்  நடைபெறும் . அடுத்தது முழுதுமாக​ யன்னல்களுடன் அடைத்த​ தாக​ முன் தள்ளி இருக்கிற​ கட்டடம் .அதில் நெசவுசாலை , பிறிம்பாக​ நீட்டிக்கட்டப்பட்ட​ சங்கீத​ வகுப்புறையையும் கொண்டது .    பக்கத்தில் பெரிய​ அகண்ட​ நிழல் பரப்பும் பெரிய​ மரம் , பழமரமில்லை .... ஒன்று நின்றது . அதன் கீழே வகுப்பு விடுற​ போது  பெட்டைகள் விளையாடுறது எல்லாம் ...கீசு மாச்சூ என ஒரே சத்தமாக​ இருக்கும் . சிலவேளை ஆண்களும் கிளித்தட்டு அங்கே விளையாடுவார்கள் . பின்னாடி பூண்டு பத்திப்போன​ கணிசமான​ வளவு. அத்துண்டை யாரோ ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு அன்பளிப்பு செய்ததாக​ சொல்லப்படுகிறது .

முருகுவிற்கு சுருளான​ முடி . அவன் வீட்டிலேயும் சிலருக்கு அப்படி சுருள்​ முடி . ஆசிரியர்கள் பெருந்தன்மையினராக​ இருந்தனர் . எப்பவுமே முருகு கண்களில் சிரிப்பு தெரிய​ ''தமிழா , தமிழா ! , திமிழா ,திமிழா ...'' என​ பாடுவான் . '' டேய் ! , நீ , நான் எல்லாம் ஒரு சாதியடா , ஆசிரியர் சாதியடா '' என்பான் இடையிடையே .  செவ்வேல் சாதி பற்றியே கேள்வி படாதவன் . இங்கே வந்து தான் கேள்வி படுறான் . அவனுக்கு விளங்கவில்லை  தான் . அவனுக்கு எல்லாரும் நண்பர்களே .

முருகுவின்​ தந்தையார் அவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை , தவிர​ அவனோட​ வாரப்பாடாகவே கதைப்பார் . அங்கே நிகழ்கிற​ நாடகம் , கலைகளை எல்லாம் அவரே தயாரித்து மாணவர்களைக் கொண்டு மேடை ஏற்றி விடுவார்  .  பாராளமன்ற​ உறுப்பினர்களும் வந்து பேச்சுக்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள் . விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன​ . ஒருமுறை மேடை அமைத்து வெளியாரும் பங்குபற்றிய​  பெரியளவிலான​ கலைவிழாவும் நடை பெற்றது .  திரைப்படமாக​ வந்த​ ஞான​ஒளியை அவர்கள்  நாடகமாக​  திறம்பட​ நடித்திருந்தனர் .  அப்ப​ தான் அங்கே இன்பமண்ணை தலைமையில் இலக்கியத்தில் ஈடுபாடுள்ள​ பெரிய​ செட் ஒன்றும் இருக்கிறது தெரிந்தது . அச்சமயம் மேல் வகுப்பினர் நடித்த​ ' குமணவள்ளல் , சிபிச்சக்கரவர்த்தி 'நாடகங்களும்  மேடை ஏறின​ . அசத்தி இருந்தனர் .  அப்படிப்பட்ட​ ஒரு  கலைஞ​ராக​  பக்கத்திலிருந்த​ பாரதி வாசிகசாலையிலும் கிளியண்ணையும் இருந்தார் . பிறகு , அவர் வெகு விமர்சிகையாக​  பாரதிவிழாவை அங்கே நடத்தி இருக்கிறார் . அவர் தமிழரசுக்கட்சியின் தொண்டரும் கூட​ . ​செந்தாமரையிலுள்ள​ பல​ குறிச்சிகளிலும் தொண்டர்கள் பலர் தம் தம்பகுதியில் எல்லாம் ஒளிவீசச் செய்து கொண்டிருந்தார்கள் . விருப்பமான​  , ஆசிரியைகள் என​ ....கதம்பமாகவே காலம் கரைந்தது . ஒரு ஆசிரியைக்கு கல்யாணம் நடந்தது . வகுப்பே அள்ளுப்பட்டு போயிருந்தது .

அப்படி  பள்ளியும் , அயலும்  , வீடு  என​ மட்டுமே கிடந்த​ ....வேறெதுமே தெரியாத​ பறவையாயே இருந்தான்  . அவன் குறிச்சியிலிருந்த​ பிள்ளையார் கோவில் வளவிலிருந்த​ புளியம் மரத்தில் ஏறி விளையாடுறது , அவ்விடத்துப் பெடியளுடன் அவ்வளவில் விளையாடுவது என்று காலம் ஓடியது . அவ்விடத்தவருக்கு பெடியள் எல்லோருமே செல்லப்பிள்ளைகள் . சைக்கிள் கடை வைத்திருப்பவர் ஒருவர் அம்மா , ' அண்ணருக்கு சைக்கிள் வாங்கிறது கஷ்டமாக​ இருக்கிறது ' என​ கூறியதை அறிந்து , சைக்கிள் ஒன்றை பொறுத்தி வந்து '' டீச்சர் , மாசம் மாசம் கொஞ்சம் ,கொஞ்சமாக​ கொடுங்கள் '' எனச் சொல்லி ஹீரோ சைக்கிள் ஒன்றைக் கொடுத்திருந்தார் . வேலைக்காசை வாங்கவில்லை , தவிர​ அவருக்கு கிடைக்கும் கழிவு விலையில் வாங்கிய​ ...பணத்தைமட்டுமே பெற்றுக் கொண்டார் . அந்த​ செட்டியார் மடத்தை ...மறக்க​ முடியாது .

பிறகு , அந்த​ சைக்கிளை , அண்ணர் பொதுசன​ நூலகத்தில் , ஆமாம் ! ,  சிங்களக்குண்டர்கள் எரித்த​ அதே நூலத்தில் தான் களவு கொடுத்தது ஒரு சோகக்கதை . அச்சமயம் சுதாராஜ் என்ற​ எழுத்தாளரும் பத்திரிகையில்  'சைக்கிள்' என்ற​ சிறுகதை ஒன்றை , அவருடைய​ சைக்கிள் களவு போனதை வைத்து  சோகத்துடன் எழுதியிருந்தார் . செவ்வேல் , சைக்கிள்  ஒன்றையும் பறி கொடுக்கவில்லை . தவிர​ , இப்பவும் கூட​ கனவில் , அவனுடைய​ சைக்கிள் களவு போறது போன்ற​ நிகழ்வு... வந்து போய் கொண்டே இருக்கிறது​ . அன்றையிலிருந்து அவர் அவனுக்கும் பிடித்த​ எழுத்தாளராகி​யும் விட்டார் .  இனம் இனத்தோடு சேர்கிறது . ஒரு வருசத்திற்குப் பிறகே . , அங்கே அடியாகக் கொண்டிருக்கிற​ சிலரும் அவர்களுக்கு தூரத்து உறவினர்  என ​ இருப்பது தெரிய​ வருகிறது .  அதே போல​ இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த​ சிங்களவர்களை, அவர்தம் சந்ததியினரை இவ்விடத்தைச் சேர்ந்தவரே என துணிந்து கூறலாம் . வலோத்காரமாக​ வந்தவர்கள் ,குடியேற்றப்பட்டவர்கள் ... இல்லை .

 ஒரு வருசம் போக​ . அதே கிராமத்தில் இன்னொரு பகுதியிலிருந்த​ பாலாமடத்தடிக்கு  குடியிருப்பு மாறிய​ பிறகு  அங்கே அடியாகக் கொண்டிருக்கிற​ சிலரும் மணம் முடித்தலின் மூலம் படரும்  விதத்தில் அவர்களுக்கு தூரத்து உறவினராக​ இருப்பது  தெரிய​ வருகிறது .   அதே போல​ இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த​ சிங்களவர்களையும் ,  அவர்தம் சந்ததியினரையும் இவ்விடத்தைச் சேர்ந்தவர் என துணிந்து கூறலாம்  போல​ தோன்றுகிறது .ஆனால் ,​ தமிழர் கிடைக்க​ வேண்டிய நியமனங்களுக்கு பதிலாக​ வலோத்காரமாக​  நியமிக்கப்பட்டு  வந்தவர்களை , குடியேற்றப்பட்டவர்களை ... அப்படி கூற​ முடியாது .

உயர்வகுப்பிற்கு படிக்க​ செல்வதற்கு முதல் ஒரு கால இடைவெளி ஏற்பட்டது . அச்சமயத்தில் தான் முருகு மழைக்காலத்தில் வயல்க்கேணிகளில் , கிணறு போல​ நீள​ அகலத்தில் கூடிய​ நீர்த்தேக்கங்கள் எல்லாம் கட்டப்படிருக்கின்றன​ , நீச்சல் அடிக்கப் போறது... இருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தினான் . செவ்வேல் ' தத்து நீச்சல்காரன்' , அது அவனுக்கே தெரியாது .  தலையை மேலே எடுக்காது நீந்துவான்  . முன்னர் இருந்த​ இடத்தில் குளங்களில் மற்றவர்களைப் பார்த்து நீந்த​ ஆசைப்பட்டு தண்ணீரை துளாவியதில் ஏற்பட்டிருந்தது . வேல்முருகு ''மிதக்கிறது சுலபமடா'' என்று கூட்டிச்  சென்றான் . கடலுக்கு போற​ நடைமுறை வேற​  அங்கிருப்பதை  இருப்பது தெரிந்திருந்ததாலே நீச்சலைப் பழக​ அவசர​ப்பட்டான் . கடலுக்கு நீச்சல் தெரியாதவர்களை கூட்டிச் செல்ல​ மாட்டார்கள் . முருகுவுக்கு ..நீச்சல் பழக்கத் தெரியாது . ஆனால் , தெரிந்த​ ஒருவரை ஏற்பாடு செய்து உதவினான் . அவர் அவனுக்கு அண்ணர் முறை . அவர் தான்  'அரைநீச்சல்'வருகிறது என்பதை தெரியப்படுத்தியவர் . கீழே அமுக்கி கொண்டு போய் , மேலே வரவைத்து என​ ...பல​ தடவைகள் நீரைக் குடிக்க​ வைத்து  திக்கு முக்காட​ வைத்தார் .  பிறகு தலை மேலே தானாக​  மேலே எழ​ நீச்சல் ...சுலபமாக​  வந்தது .  பிறகு , முருகுவோடு நிறைய​ தடவைகள் நீந்தி இருக்கிறான் . அவனைப் போல​ பின்புறமாக​ கரணம் அடிக்க​.. மட்டும் வரவேயில்லை . கண் இமை மடலையும் மடித்து வேறு விசித்திரம் காட்டுவான் . இவன் முன்புறமாக​ ஒரு கரணம் அடிப்பான் . கிராமத்தில் இரண்டு , மூன்று அடிப்பவர்கள்  இருக்கிறார்கள் .

முந்தின​ வகுப்பில் அமைதியாக​ இருந்த​ ஒரு தோழர் அவனுடைய​ கடலாசையையும் நிறைவேற்றி வைத்தார் .  எவரையுமே குறைவாக​ மதிப்பிட்டு விடாதீர்கள் . ராகவனிடம்  இருந்து கிடைத்த​ அந்த​ எதிர்பாராத​ உதவி உங்களுக்கும் கூட​ எவரிடமிருந்தும் கிடைக்கலாம் .  அதற்கும் நேரம் வர​ வேண்டும் .  அவன் கிராமத்தின் தெற்குப்பகுதியிலிருந்து ...வாரவன் . சனி ,ஞாயிறுகளில் தகப்பனுடன் சேர்ந்து சிலவேளை கடற்டொழிலுக்கும் செல்கிறவன் . ''ஒரு இறாத்தல் பாணும் , கொஞ்சம் பச்சை மிளகாய் வெங்காயம் கொண்டு வா . மிச்சத்தை நாம் பார்த்துக் கொள்கிறோம் '' என்றான் .  சொன்ன​ இடத்தில் , அவனோடு ஜெயந்தனும் நின்றான் . அவனுடைய​ மச்சான் . அவனும் அதே வகுப்பு தான் . வள்ளத்தை அவிழ்த்து வந்தான் . மூவருமாக​ களங்கண்ணி ஒன்றுக்கு போனார்கள் . தடியை ஊன்றி கயிறை கட்டி வள்ளத்தை நிறுத்தினான் . ராகவனும் , செவ்வேலும் வலைக்குள்ளே இறங்கினார்கள் . ஆளை தாழ்க்கும் கடல்  . ஆழத்திற்குச் செல்ல​ எப்படி மீன் . நண்டைப் பிடிக்கிறதென​ காட்டினான் . ஜெயந்தன் அவற்றை ராகவனிடம் வாங்கி வள்ளத்திற்குள் போட்டான் . களங்கண்ணிக்கு வெளியே வந்து கொஞ்ச​ நேரம் நீந்திகளித்தார்கள் . கரையிலிருந்த​ கூடாரம் போன்ற​ வாடிக்குச் சென்று , மீன் பிடிக்க​ வாரவர்களின் தங்கிமடம் .  அடுப்பு , விறகு , சுள்ளி...எல்லாம் கிடந்தன . பானை சட்டி , சாப்பிடுற​ கோப்பை மேசை போன்ற​ மரச்சட்டத்தில் கவிழ்த்திருந்தன​ . கூரையில் தடவி தீப்பெட்டியை எடுத்து வந்தான். கொண்டு வந்ததை சுட்டு , உப்புச்சொதி வைத்து உறைப்புடன் உப்பால் காய்ந்த​ வாயில் சாப்பிட​ வெகு சுவையாக​ இருந்தது .  ''இந்த கிராமத்துக் கடன்களை எல்லாம் செவ்வேல் எப்ப​  தீர்க்கப்போறானோ ?  ''.  

வசதியும் தொழில் வாய்ப்புமில்லாது கரையும் வாழ்வைக் குறித்து கழிவிரக்கப்படுறான் . மற்றவர்கள்   கிராமத்தை விட்டு சிதறல்களாகி​ யாழ் இந்துக்கல்லூரி  ,மத்தியக்கல்லூரி , வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என​ படித்துக் கொண்டிருந்தாலும் அன்று எல்லோரும் கிராமத்திலே  தான்  இருந்தார்கள் . அதனால் ,தொடர்புகள் முற்றாக​ அறுபட்டு போயிருக்கவில்லை .

செவ்வேல் சிறு வயதிலிருந்தே வெளிவாரியாகவும் புத்தகங்களை வாசிக்கிறவன் . 18வயசில் ஒரு வேலையும் (பகுதி) கிடைத்து படிக்கிறதும் இருந்தால் நல்லம் என​ யோசிப்பவன் . அப்படியான​ ஒரு கனவுவாழ்க்கை , 1ம் மண்டலம் , 2ம் மண்டலம்   , 3ம் மண்டல நாடுகள் ...மண்ணாங்கட்டி , எங்கையும் கிடைக்கக்  கூடிய ஒன்று தான் . இன​ , மத​ ...கண்றாவி ஊழல்கள் மட்டும் இல்லாது ஜனநாயகம்...​ மேலோங்கி இருக்குமென்றால் எட்டக் கூடிய​ தூரம்  . முதலாவது அப்பன் நல்லாய் இருக்க​ வேண்டும். , அது மத்திய​ அரசு . மூளை போன்று புத்திசாலியாக​ இயங்கி வழி காட்ட​​ வேண்டியது . பிள்ளைகளின் உரிமைகளில் (மாகாணங்களில் )  அதிகம் மூக்கை நுழைக்காத இங்கிதம் நிலவ​ வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்டவர் சேர்ந்தாலே சக்தி ஒன்று பிறக்கிறது . குழு அமைப்பான​ படைக்கட்டமைப்புகள் நிறைய​ , அவற்றில் பிரமாண்டமான​ சக்தி கிடக்கிறது . அதன் கொள்கைகளில் இன , மத​ வெறிகள் சேர்ந்து விட்டால் ...கெட்டசக்தியாகி விடுகிறது .​ மக்களுக்கு அது வெளிபடுற  , வாய்ப்பளிக்கிற  தன்மைகளால் ​'எங்களுடைய​ புஜங்கள் ' என்ற​ பெருமிதத்தை ஏற்படுத்தாது விட்டால் 'ஒரு அன்னியசக்தி 'தான் . மற்றும் வெளிநாட்டுடன் நன்மை பயக்கும் தொடர்புகளை பேணுவது அதன் முதன்மையான​ வேலை .  அந்த​ நாட்டு உடலில் 'மாகாணவரசு'  இதயம் போன்ற பிரதான​ பாத்திரத்தை வகிக்கிறது .  சுயதிறனுடன் இயங்க​ விடவே​ வேண்டும் . அடுத்தே உள்ளூராட்சி சபைகள் . உடலில் கிடக்கிற​ கால் , கை போன்றவை . ஆனால் , ஈழமோ , இஸ்ரேலைப் போல​ (அரசியல்) ஊழல் களஞ்சியமாகி மெண்டலாகவே இருக்கிறது .

பிரீட்டீஸ் ​ கல்வி முறையிலே ஏதோ, ஏதோ பிழைகள்  கிடக்கிறது   என்று அவனுக்கு தோன்றிக் கொண்டே  இருந்தது  . கிராமம் , நகரம் என்ற​ வேறுபாட்டில் நகரம் விளையாட்டில் அட்வான்ஸாகவே​ இருந்தது . அவனுடைய​ கிராம​ வாழ்வில் அதன் அவசியம் தெரியாது அவன் துப்பரவாக​ ஈடுபட்டதே இல்லை என்ற​ நிலமை . நகரப்பள்ளியில்  , வகுப்பில் கூட​ படித்த​ பகிர் , புதிசாய்ரோல்  மொடலாக​ தெரிந்தான் . கலா ''மரதன் போட்டியிலே பங்கு பற்றன் '' என்று  கூறினான் . சிவக்குமார் ''என்னோடு மைதானத்திற்கு வந்து சேர்ந்து ஓடு .எல்லாம் வெல்லலாம்  ! '' என்றான் . அப்படி  .இரண்டொரு தடவைகள் வட்டமடித்தான் . 'ஏன் ? , நகரத்திலிருக்கிற​ ஆச்சி வீட்டிற்கு கிராமத்திலிருந்து ஓடி வரக் கூடாது ?  'என்ற எண்ணம் தோன்றியது . அங்கே வந்து தான் அருகிலிருக்கிற​ பள்ளிக்கூடம் போறவன்  . ஒருநாள்  , ஆச்சி வீட்டிலே புத்தகப்பையை வைத்து விட்டு ..செயல்படுத்தினான் . காலையிலே , அப்பர் வீதியில் நடை போறவர் . அவர் எதிர்பட​'' என்ன​ உயர் வகுப்பிலே வந்து விளையாடுறே ''என திட்டி இழுத்து  வீட்டிற்கே  கூட்டி வந்தார். அன்று மட்டம் .

இரண்டொரு மாசத்தில் அப்பர் இறந்து விட்டார் . இப்ப​ , முழு சுதந்திரப்பிறவி .அவன் வீட்டிலிருந்து ஓடவில்லை .பள்ளி முடிந்த​ பிறகு வீட்டிற்கு ஓடிவந்தான் . கடல்வெளி வீதியில்  அப்படி ஓடி வருகிறது வெளியுலகை சிறிது பார்க்க​ வைத்தது . கால் போன​ போக்கிலே ஓடலாமா ? ...! .

அன்றைய​ பள்ளி விளையாட்டுப் போட்டியில் புத்துயிர்ப்புடன் மரதன் ஓடிய​ போது வழக்கமாக​ முதலாவதாக​ வருகிற​ அவனுடைய​ ரோல்மொடலுக்கு  கால் தசைப் பிடிப்புக்குள்ளாகி இடையில் நின்று விட்டான் . கிராமத்திலும் படித்த , அதே வகுப்பிலும்  படித்த​ கதிர் ( குறுந்தூர​ வெகுவிரைவு ஓட்டக்காரன்) இடையில் சக்க்கிளிலே ஏறி அவனை '' ஓடு , ஓடு '' என​  ​ விரட்டி  கலாயித்தான் . சிவம் '' எப்படியும் ஓடி முடிக்க​ வேண்டும் .  அது முக்கியம் '' என்று கூறியதை மனதில் வைத்து 6..வதாக​ வந்தான் . பரீட்சையில் ஏற்பட்ட​ சறுக்கல் பற்றி எல்லாம் கவலைப்படவே  இல்லை . அம்மாவும் பழைய​ ஓட்டைச் சைக்கிளை வாங்க​ காசு தந்தார் . சைக்கிள் ஓடும் தானே , அது போதும் .  பள்ளியை விட​ வெளிவாரியாக​ சனசமூகங்கள் வைக்கிற​ மரதன்களில் எல்லாம் ஈழநாடு பேப்பரில் பார்த்து ,பார்த்து சுமார் 25   , 30 ... வரையிலான​ மரதன்களையே ஓடி முடித்திருக்கிறான் . ஒரு பெரிய​ திக்விஜயமே செய்திருக்கிறான் . பலவற்றில் ஐந்து வரையில் பரிசோ பத்திரமோ வழங்கிவார்கள் . அப்படி ' போன்விட்டா ரின் , டோர்ச் லைட் ..நிறைய​ பத்திரங்கள் ' என​ கிடைத்திருக்கின்றன​ . அதனாலே புன்னாலைக்கட்டுவன் , மானிப்பாய் , குருநகர் , பாசையூர் , அரியாலை , பருத்தித்துறை... என​ யாழ்ப்பாணத்தில் பல​ இடங்கள்  தெரிய​ வந்தன​ . இல்லா விட்டால் வவுனியாவில் இருந்தும் வவுனியா அவ்வளவு தெரியாதது போல​ யாழ்ப்பாணமும் தெரியாமலே இருந்திருப்பான் . நகரப்பெடியள் பலருக்கு கிராமமே தெரியாது .

மரதன் , சைக்கிள் ஓட்டப்போட்டிகள்  .நடத்துபவர்கள் ஊக்குவிக்கும் மனதினராக​ இருந்தனர் .  ஓடி  முடிக்கிற​ அனைவருக்குமே ஜூஸ்கள் வழங்கினார்  . ஓடாத​ போதிலும் கூட​ இவன் தெரியாத​ இடங்களுக்கும் ​ சைக்கிளை விட்டு தெரிந்து கொள்ளத் தொடங்கினான் . கீரிமலைக்கு கன​ தடவைகள் சென்றிருக்கிறான் . ஒருமுறை கிராமத்து நண்பன் அவனின் அப்பாவும் இறந்ததால் சேர்ந்து​ வந்து ,அவனையும் தர்ப்பை போட​ வைத்தான் . இன்னொரு நண்பன் நல்லூரில் நேர்த்தி வைத்து உள்வீதியில் பிரதிட்டை எடுக்கிற​ போது இவனையும் எடுக்க​ வைத்தான் . அவன் சோனகர் தெருப்பக்கமும் அடிக்கடி சைக்கிளை விட்டு திரிவான் . அங்கே  தபால் கட்டட​ தூண் போல​..இருந்த​ பழஞ்சின்னங்கள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன​ .   ஆச்சரியப்படுத்தியிருக்கிறன . இப்படியும் சில​ அனுபவங்கள் .79  , 80 களில் ஆமிக்காம்கள் முளைக்கிற​ வரையில் மரதன் ஓட்டங்கள் எந்தவித​ தடையுமில்லாது நடந்தன​ .  அரசபயங்கரவாதம் ( சட்டமும்  அமுலாகி ) தலையெடுக்க​ ...எல்லாமே நின்று போயின​ . யாழ்ப்பாணமும் களையிழந்து போனது .

காலனிக்கு முதல் தமிழ் , சிங்கள அரசுகள் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் சுயத்தில் ( கல்வி , வாழ்வியலில்) மேம்பட்டவர்களாக​ இருந்தார்கள் . பிராமணர் போல​ புத்தபிக்குகள் ஆசிரியர்களாக​ விளங்கினர் . காலனின் போது அவையெல்லாமே குழம்பிப் போயின ​.  நல்வாழ்வு அமைய​ படிப்பு அவசியமானது எனக் கூறினாலும் அது  இலகுவானதாகவும்​ இருக்க​ வேண்டும் . ஒரு சீர்​ நகர்வு உடையதாக​ வேண்டும் . தற்போதைய​  இனவெறி பிடித்த​ அரசியல் ...படித்தவர்களையும் பையித்தியமாக்கி விட​ சிக்கலான​ சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருந்தன​ . காலனியரின் ஆட்சியை பிரதி எடுத்ததின் பலன் , படித்தவர்களின் நிலமை  மிக​ மிக​ மோசம் . படித்துக் கொண்டேயிருப்பதும் வெறும்  விரயக்காலமானது . நடிகர் ரஜனிகாந் கூறியபடி எட்டு , எட்டாக​ காலத்தை பிரிக்க​ முடியாது ஈழநிலமை குழம்புறது . இராமாயாணம் , மகாபாரத்திலும் கூட​ பதினாறு வருசங்கள் தண்டனையை அனுபவிக்கனும் என்று இந்த​ எட்டு ,எட்டு காலத்தையையே குழப்பி தள்ளியிருக்கிறார்கள் . அங்கே வயசு எல்லையைக் கூட்டி கதை சொல்லி முடிக்கப்படுகிறது  . நிஜத்தில் கடந்து போனது போனவையே .திரும்பி வராது .  அதற்காக​  வேணுமென்றே  நாடுகளில் முதலில் பயங்கரவாதச் சட்டமே அமுலாக்கப்படுகிறது . இங்கேயிருந்தே வதைமுகாம் , கொலைகள் , பயமுறுத்தல்கள் என​ அச்சப் பிராந்தியை அருந்த​ வைத்து ...புதைகுழிகளை ஏற்படுத்தி இனவெறி ஆட்சி பட்டையைக் கிளப்புகிறது . பதிலடி கொடுக்க​ இவற்றின் அடிப்படைகளை  தெரிந்து புரிந்து கைவைக்க​ வேண்டும் . வல்லரசு​ சக்திகளை பரந்த​ நோக்கிலே சென்று வேறு சேதப்படுத்த​ வேண்டும் . யானைக்கும் அடி சறுக்குவது போல​ , பாதிக்கப்பட்டவரிற்கு புல்லும் ஆயுதமாகவும் அமைந்தும் விடுகிறதை காலமும் சொல்லியே வருகிறது . அரசியலே வேணாம் என்றாலும் கூட​  இழுத்துக் கொண்டு போய் கொல்லும் நவீன​ ஆயுதங்களும் ஆட்சிகளும் முடிவுக்கு வர​ வேண்டும் . நாடுகளுக்கு காலனி ஆட்சியிலிருந்து கிடைத்த​  அரைகுறை சுதந்திரம் போதாது .முழுமையாக​ சுதந்திரம் பெற​ வேண்டும் . பாகிஸ்தானைப் போல​  ஈழத்தையும்  ஐரோப்பிய​சக்திகள்கள் நலமடித்து தம் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றது​ . அகதியாய் செல்லும் மக்கள் அந்நாடுகளில் கம்யூனிச அரசியல் கட்சியை ஏற்படுத்தி அங்குள்ள​ நல்லவர்களையும் சேர்த்துக் கொண்டியங்கினால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படலாம் போலத் தோன்றுகிறது .

ஈழத்தில் தான் , அரசியலில் எத்தனை அழுக்கென​​ அழுக்கு  ? . சிங்களப் புரட்சிவாதிகளை மன்னித்து விடுவார்கள் . தமிழ்ப் புரட்சிவாதிகளை  மன்னிக்க​ மாட்டார்கள் . ஜனநாயகத்தை துப்பரவாக​ கழுவி விட்டார்கள் . தமிழ் இளைஞர்களுக்கு  'ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்தாலாவது உரிமைகளை வென்றெடுக்கலாம் ' என்ற​ மேலோட்ட​ எண்ணங்கள் அடிக்கடி வந்து மறையும்  . விடுதலையில்​ ஒரு அட்சரமும் தெரியாத​ நிலைமை வேறு கால்களைக் கொளுவ​ வைக்கும் . வேல்முருகு , செவ்வேல்  நிலமையும் அதே தான் .

 . 76 இலிருந்து 79 வரையில் உயர்வகுப்பு . இவர்களுடைய​ காலத்தில் பயங்கரவாதச்சட்டம் அமுலாக்கப்பட்டு பெரும்பாலும் தமிழருக்கெதிராகவே  கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது .  அந்நேரம் இதைப்பற்றி எந்த​ விபரமும் தெரியாது . பிறகு , இவர்களுக்கு 'எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட​ வேண்டும் ' என்பதே இலக்கு . கல்வியில் ஊழல் நிலவியதால் வடபகுதியில் டியூசன் வகுப்புகள் கொள்ளை கணக்கில் பெருகிக் கிடந்திருந்தன . பிரபல​ டியூசன் வாத்தியார் ' பிறகு அவர்கள் பெறுகிற​ பணத்திற்கும் வரி கட்ட​ வேண்டும் ' என்ற​ ஒருசட்டத்தை அரசு கொண்டு வந்திருந்தது ' என்கிறார் .  பரீட்சைகள் மேல் ஒர் அலட்சியம் விழுந்தது  . செவ்வேல் டியூசன் வகுப்பிற்கு போய் படிக்க​ விரும்பவில்லை . போகவும் இல்லை . பணம் கட்டக் கூடிய​ நிலையில் பலர் இருக்கவில்லை . அவன் நண்பர்களில் ஒருசிலர் சென்றிருந்தார்கள்  . ஆனால் , தேர்ச்சி எய்யவில்லை .  அட்டமத்தில் சனி இருந்து வேலை காட்டி விடுகிறது . வேலை தேடல் . அச்சமய நண்பன் குகா , அவனோட​ சேர்ந்து ஒரு வேலையிலாவது கொளுவி விடுவோமா? என​ தபால் ஓபிசில் கெசட்டைப் பார்ப்பதும் விண்ணப்பிப்பத்தலில் ​ வாழ்க்கை வெறுத்துப் போனது . அலுவலகர் ''தம்பிகளா , தொழில் கல்லூரியில் எதையாவது படிக்கப்பாருங்கள் '' என்று ஆலோசனை கூறுவார் .  திரும்பவும் படிப்பதென்பது எவருக்குமே   வெறுக்க​ வைப்பது .    படிக்கிற​ படிப்பில்  தொடர்ச்சி வேறு கிடையவே கிடையாது  . செவ்வேல் , விண்ணப்பித்து  தொழிக்கல்லூரியிற்கு படிக்க​ சென்றான் . குகா , வேல்முருகு போன்றோர் செல்லவில்லை .'வேலைக்கு ஒரு தகுதிப்பத்திரம் வேண்டுமே .   குறுக்கு மறுக்காவே சிந்தனை அவனை கவ்வும் . சக தோழர்கள் வெளிநாட்டுப் பரீட்சைகளை எடுக்க​ முயன்ற​ போது , இவன் ' டேய் பாருங்கடா , இங்கத்தைய​ படிப்பிலே வேலை எடுத்து நல்லாய் இருப்பேனடா 'என்ற​ ஒரு குரல் அவனிடம் இருந்தது . அறியாமை இருள் , மட்டுமல்ல​ நோய்ப்பிரச்சனைகளிலும் விலத்தி நிற்கும் வீருநிலை இருக்க​ வேண்டும் . சமூகம் ஆங்கிலகல்வியில் சலவைக்குள்ளாகி சுயத்தை  , அதன் பெறுமதியை அறியாதிருந்தது . ஈழவரசின் முட்டாள் தனமாக​ இனப்போக்கும் அதற்கு நெய் வார்த்தது . காலனியாட்சியை அப்படியே பிரதி எடுத்து புதிய​ எஜமானராக​ வல்லபம் காட்டியது . அனைத்து அடக்குமுறைகளையும் காலனிப்பிரிவே பின்னின்று ...இனப்படுகொலை நிறைவேற்ற​ காய்களை நகர்த்தி வந்தது .வருகிறது . இவர்களிடமிருக்கிற​ விசக்கொடுக்குகளை பிடுங்கி எறியாதவரைக்கும் தமிழருக்கு விடிவில்லை . ஆனால் , இதையெல்லாம் தெரியாத​ அறியாமையில் ஈழச்சமூகம் கிடக்கிறது .

'சென்று , தொழில்கல்லூரியில் படிப்பில் தேர்ச்சி பெற்றும் , தொழில்ப்பத்திரம் கிடைத்தும் வேலை கிடைக்கவில்லை . அது ​ அவனை  வருத்தியது . பொலிஸார் , பயங்கரவாதச்சட்டத்தைப் பயன்படுத்தி , சந்தேகத்தின் பேரில் ...என​ பலரைப் பிடித்து வதைப்படுத்தி குற்றப்பத்திரிகைகளை பொய்யாகத் தயாரித்து குற்றமாக​ ஒப்பேற்றி வைத்திருக்கிறார்கள் . வரும் ஆட்சியாளர்கள் 'நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூப்பிக்கப்பட்டிருப்பதால் மன்னிபளித்து விடுதலை செய்ய​ முடியாது ' என​ கையை விரித்துக் கொண்டே இருக்கிறார்கள் .  அவர்கள் ,   தமிழர் இனமாக​ இருந்திருந்தால் இந்நேரம் விடுதலை செய்திருப்பார்கள் . காலத்திற்கு காலம் இனவாதமே மேலோங்கியபடி  வருக்கிறது . இதற்கிடையில் 'வசந்தம் , ஊழலற்ற​ ஆட்சி ' என்ற​ வெளிச்ச​ங்கள் . சிஸ்டம் படு பிழை . எண்ணெய் போடுங்களப்பா .

அரசியல்  வெகு அலட்சியமாகவே    நிலவி  வருகிறது . எல்லாத்திற்குமே (வேலைகளுக்கும் )கொழும்பையே கையேந்தி  எதிர்பார்க்க​ வேண்டியிருந்தது .அதைப்பயன் படுத்தி  சிங்கள​ அலுவலளர்கள்  ஊழல்  மூலமாக​   கணிசமாக​ உழைத்துக் கொண்டிருந்தார்கள்  .  அரசே திட்டமிட்டு ஊழலை நிலவ வைத்துக் கொண்டிருக்கிறது . ஜனநாயகம் நிலவவில்லை என்றால் , மாகாணவரசு தேர்த்தலை நடத்தாதிருந்தால்...இந்நிலமை தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது . நிலத்தில் மட்டுமில்லை , எல்லாக்கோதாரிகளையும்  தம்மவர்க்கே  என​  தமிழரிடமிருந்து பறித்து கொடுக்க​வே ...கங்கணம் கட்டி நிற்கிற  ஓர்  இனவாத​ செவிட்டு அரசிடம் என்னத்தை கேட்பதாம் ? . ''தனிநாடு கேட்பவர்களை எல்லாம் பயங்கரவாதிகள் அவர்களுக்கு விடுதலை கிடையாது '' என்று சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிற​ தொடர் ஆட்சியாளர்கள் . அடியைப் போல​ ...ஒன்றுமே உதவாது . ' ஒரு பலமான​   அடி '  வலிக்கிற​ போது மாற்றங்கள் ஏற்படும் 'என​ சில​ இளைஞர்கள் குமுறிக் கொண்டேயிருக்கிறார்கள் . அதனால் ஒரு  செயற்கையான​ எரிமலைத்தேசமாக​ ஈழம் கிடக்கிறது . இயற்கையையே ஆராதிக்க​ தெரியா ஜென்மங்களிடம் அறத்தை எதிர்பார்க்க​ முடியாது . இதெல்லாம் அன்று அவனுக்கு மங்கலாகவே புலப்பட்டுக் கொண்டிருந்தது .

வேலை எடுக்க​ அலைந்தது வீண் விரய​ம்  . குகா , செவ்வேல் , முருகு வேலைவங்கியில் பதிந்தாலும்​  ஆசிரிய குடும்பத்தாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை . குகாவும் , முருகுவும் மேற்க்கொண்டு படிக்க​ முயலவில்லை . கடைசியில் , குகாவை , அவன் அக்கா ' வெளிநாட்டுக்கு அனுப்பினார் .   வேல்முருகு  அப்பரின் ஏச்சுக்கணைகளால் வெகுவாக​ துவண்டு போய் இருந்தான் .  முருகுவும் அவனும் வெளியில் போன​ குகா- அக்காவின் கல்யாண​ வீட்டில் சந்தித்தார்கள் . முடிந்த பிறகு , இருவரும் வீட்ட​ போக​ மனமில்லாது நீண்ட​ நேரம் பலதையும் பேசிக் கொண்டிருந்தார்கள் . அலட்டிக் கொண்டேயிருந்தார்கள் . அடுத்த​ கிழமை போல​ ...முருகு வள்ளத்தில் மிதக்கிறான் .

எப்படி பார்த்தாலும் , 'பயங்கரவாதச்சட்டம்'  இனப்பாகுபாட்டை  அடிப்படையாக​க் கொண்டே எழுகிறது  . அதை அகற்றாது தொடர்ந்து கொண்டு ஊழலற்ற​ ஆட்சி என்கிற எந்த​ ஆட்சியும் கறை படிந்ததாகவே இருக்கும் .

பொதுவாகவே  , ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் போராட்டதிற்கும் வெகு தூரம் . தவிர​ வீட்டிலே பல​சகோதரங்கள் இருப்பர் . மேலே , கீழே இருப்பவர் மாறி தேர்ச்சி பெறுகிற போது . பெற்றோரின் திட்டல்களும் அதிகரித்து விடும் . அதனால் , வீட்டை விட்டு பிள்ளைகள் ஓடுறதும் நடை பெறுகின்றன​ .  அச்சமயம் புதிய​ சந்தை கட்டடத்தில் பகல் முழுதையும் திரிந்தே கழிக்க வந்திருக்கிற​ கணிசமான​ பெடியள் செட் அவ்வாறு வீட்டில் இருக்க​ முடியாது ...வந்திருந்தவர்களே . அப்படி இருந்த​ சிலர் '' நீயும் கடைசியில் வந்து விட்டாயா? '' என்று   இயக்கத்தில் சிரித்துக் கொண்டு முதலில் வரவேற்றார்கள் . அவனுக்கு தெரிந்த​ பல​ முகங்கள்  .  இயக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தன​ . வேலை இல்லை .

வேல்முருகு சென்றது செவ்வேலை வெகுவாக​ குழப்பி விட்டது . அவனையும் வீட்டை விட்டு துரத்தியது எனலாம் . அதே இயக்கத்தில் வள்ளம் ஏறும் எண்ணத்தில் சுழிபுரம் சென்றான்  . இவர்களுக்கு கல்வியில் நிலவும் ஊழல் ,வேலை வாய்ப்பில் நிலவும் ஊழல் பற்றியும் விபரமாகத் தெரியாது . சில்லு சிக்கலில்லாமல் அமைய​ வேண்டிய​ வாழ்வு இன  அரக்கனால் கழுத்தை நெரிக்கும் நிலமை , அது இயல்பான​  வாழ்வோட்டத்தில் பாதிக்கும் பிரச்சனைகளில் கணிசமானவற்றை சமூகத்தாலும் ஓரளவு சமாளிக்க​ முடியும் தான் , ஆனால் , காலனியாட்சியிலாலும் சலவை செய்யப்பட்ட​ சிந்தனைகளும் அதை ஒட்டிய​ எதிர்பார்ப்புகளும் தடம் புறழ​ வைக்கிற   போது விதியும் , தன் வழியிலும் இழுத்துச் செல்கிறது . ஆமாம் காலனிகாலத்திலேயே..., அவன் அம்மா பிறந்தது ....ஈழம் விடுதலை பெற்றது  அவர்கள் அந்த​ கோதாரி பிடித்தவர்களின் ஆட்சியையும் நேரில் கண்டவர்கள் ,   கிராமங்களில் இருக்கிற   இவர்கள்காலத்தில்   வெள்ளையர்களை கண்டிருக்கவில்லை என்றே கூறலாம் .இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் 'கலவரம் , கலவரம் 'என​ இனவெறி பிடித்த​ அரசின்  முகங்கள் தான் . ஆனால் . படிப்பு , வேலை ..என​ கிடந்த​வர்க்கு அரசியலும் தெரியாது . தமிழ் அரசியல் கட்சிகள் நடத்துற​ ஆர்ப்பார்ட்டங்களில் பங்கு பெற​ வேண்டுமா ? என்று கூடத் தெரியாது .   உயர்வகுப்பில் கால் வைத்தவர்களுக்கு கல்வி சறுக்கவே​ வேலை ஏதாவது எடுக்கிறதிலே கவனம் குவிந்திருந்தது .  கடன் கொப்பியில் ஓடும் ஆசிரியச் ஜீவியம் அம்மாவிற்கு . முருகுவிற்கு ஆசிரியராக​ அப்பர் இருந்தாலும் நிலம் சிறிதளவு இருந்தது . இவர்களுக்கு துடுப்பில்லா வள்ளம் . அவர்களுக்கு துடுப்பிருந்தது .ஆனால் ,நிலமிருந்தால் என்ன​? ,  வேலையில்  இல்லை என்றால் ...பிள்ளைகளிற்கு வாழ்வே மாயப் பிரச்சனை தான் . அதிருஷ்டம் சிலர்க்கு  வேலை செய்ய  தப்பி விடுகிறார்கள் . முருகு , செவ்வேலுக்கு அப்படி ஒன்று மருந்துக்கும் இல்லை .

எனவே தான் ராஜூ ''நீயும் வருகிறாயா ?''  எனக்கேட்ட​ போது முறுகாமல் சம்மதித்திருக்கிறான்​ , அவனோட​ நின்ற​ வவுனியாப்பக்கமிருந்து வந்திருந்த​ செல்வன்(தம்பி முறை) கலவர​ அதிர்வுகளை சமீபத்தில் கண்டிருந்தவன் ''அண்ணே நானும் வரவா''என்று கேட்க​ இருவருக்குமே அதிர்ச்சி . ''டேய் , மாமிட​ முகத்திலே உயிருள்ள​ வரையில் முளிக்க​ முடியாதடா. உனக்கு வயசும் கூட​ போதாதே''என​ எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் . கடைசியில் அவனும் சேர​ சென்றது கிராமத்திற்கு முதல் அதிர்ச்சி  . அக்குடும்பங்களிற்கு பேரதிர்ச்சி .  நட்பு காரணமாக​ ​ இவனிலும் அதிர்வுகள்  . இது நடந்தது தொடக்க​ வள்ள​ ஏற்றத்தின் போதல்ல​ . கடைசிக்கட்ட​ காலத்தில் . செவேலும்  , அதே கிழமை  ,அதே இயக்கத்திற்கு .... வீட்டை விட்டு வெளியேறி விட்டான் . ''இனிமேல் வீட்ட​  போக​ விரும்பேலே தோழரே '' என்று கூறிய​ போது அவர்களும் வள்ளத்தில் ஏற்ற​ ஏழுமான​ முறையில் முயன்றும் , அதிருஷ்டமும் இல்லையோ....தடைபட்டு​ , தடைப்பட்டே வந்தது .  கனேடிய​ பழங்குடிகள் '' இந்த​ பிரபஞ்சம் கனவுகளால் நிறைந்திருக்கிறது . மனிதர்கள் தெரிவதில்லை   அவை தாம் தாம்  பற்றிக் கொள்கிறது '' என்கிறார்கள் .  அதுவும் ஒரு விதத்தில்   அதிருஷ்டம் என்பது தெரியாது .   அப்படி ஒரு மாசம் வரையில் சுழிபுரத்தில் வாழ்ந்தான் . சுழிபுரத்தை இரவிலும் , பகலிலும்   பார்த்தான் , அறிந்தான். இளவாளையும் அப்படிப் பார்த்தான் . ஒரு காலத்தில் அங்கேயுள்ள​ கொன்வெண்டில் அவனுடைய​ பாட்டி படித்தவராம் . முன்னோர் கால் பட்ட​ இடத்தையும் பார்த்து விட்டான் . அவனுக்கு வள்ளம்  தலை சாய்க்கவில்லை .   ...கடைசியில் வள்ள​ ஏற்றமும் நிறுத்தப்பட்டு விட்டது .  தமிழ்நாட்டில் ,  கால் வைக்கணும் என்று ' உள்ளே அடித்துக் கொண்டு ​கிடந்த​​ ​ ஆசை ' நிறைவேறவில்லை . இப்படி போகா விட்டால் , தமிழ் நாட்டிற்கு போகும் விதி , வாய்ப்பு வரப் போவதே இல்லை . ''கடைசி வரையிற்கும் , உனக்கு விடுதலை கிடைக்கும் என்ற​ நம்பிக்கை துளி கூட​ இருக்க​ மாட்டாது '' என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார் . இதை நினைத்து அழுவதா ?​  . அந்நாளில் 'அவனுக்கு ​  எல்லாமே மறுக்கப்பட்டு  வருகிறது ' என்ற​ உணர்வே மேலோங்கி இருந்தது . ஏதாவது நிறைவேறி இருந்தால் இவ்விரு கிராமங்களை... அறிந்திருக்கவே மாட்டான் . இதே போல​ ஒரு நாள் விடுதலை அவர்களுக்கும் கிடைக்க​ இருக்கிறது . அன்று கெட்டு , அழுகிப்போன​ சக்திகள் எல்லாம்  அவமானத்துடன் தலை கவிழ்த்து நிற்கவே போகிறது . உண்மை , சத்தியம் , தர்மங்களை அடக்கி வைக்கவே முடியாது .

பின்னாட்களில்  , தொல்புர​ கோவிலில் பழைய​ சரித்திரக்கால​ மிச்சங்களை (எச்சங்களை) கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறான் . திருவடி நிலை , பெரியபுலம்...எல்லாம் சைக்கிள் ஓடித் திரிந்திருக்கிறது . பிறகு தீவுப்பகுதியைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே...வள்ளம் ஏறாததாலே கிடைத்த​ அனுபவங்கள் .   மரதனும் , இயக்கமும் அவனை யாழ்ப்பாணம் முழுதையும் ...குச்சுக்களையும் , பட்டி , தொட்டிகளையும் பார்க்க​ வைத்திருக்கிறது  . இவையெல்லாம் பெரிய​கொடுப்பனை இல்லையா ! . '' நீ ...இங்கே இருப்பது தான் பெறுமதியானது என்பதை ...புரிந்து கொள்வாய் '' என்று அன்று  தோழர் பொன்னம்பி கூறியது  தான் எவ்வளவு உண்மை .

ரஸ்ய​ நாவல்களை வாசித்ததில் விடுதலைப் போராளிகளை நேரிலே சந்திக்க​ இயக்கத்தில் சேர்வது அவசியம் என்பதை மேலோட்டமாக​ அறிந்து வைத்திருந்தான் .  ... இழுபட்டுக் கொண்டேயிருந்த​ 'சேரல் ' வேல்முருகால்' சாத்தியமாகியது . கிராமத்திலிருந்து  இயக்கத்திற்குச் சென்ற​வர் என்றால்   உயர்வகுப்பில் கால் வைத்த​ மூவர் வேல்முருகு , மற்றொருவர் , அவன் ...மட்டுமே தான் . மற்றவர் எல்லாமே ...கீழே இருந்தவர்களே .    கிராமப்பொறுப்பாளராக​ சின்னண்ணை அவனை பிரேரிக்க​ பொறுப்பாளராகி விட்டருக்கிறான் . அவன் கிராமப்பொறுப்பாளரான போது முதலில் உணர்ந்தது தலைமைக்கும் கிராமத்திற்குமிடையில் ஒரு தபால்காரனாக​ இருக்கிறதே அவனுடைய​ முதல்வேலை என்பதை .  

தமிழ்நாட்டு உறவு தொப்புள் கொடி உறவு . ஈழவரசின் உறவு திரைந்து போன​ உறவு . எனவே தான் பிறகு நிகழ்ந்தேறிய​ காலக்கட்டதில்  , ஈழவரசு நிகழ்த்திய​ பலியெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்தியனாமியால் விளைந்த​ நாசம்    ..தசம​ ஸ்தானத்து ....பலியெடுப்பாக​  இருந்த​ போதிலும் , அவை ஏற்படுத்தி விட்ட​ அதிர்வலையிலிருந்து விடுபட​ முடியாதவர்களாக​  இருக்கிறார்கள் .'  இனத்துவேஷம்' அதிக திரையல்  . பாதிப்பு  கூடியது . இந்தியனாமியுடையது பிழைகள் , திரையாதது ! குறைந்த  பாதிப்பு . குறைந்ததை செப்பனிட்டுக் கொள்ள​ முடியும் . குறையாததை ...?? தொடர​ விடக்கூடாது . இந்தியா வளர்ந்து வரும் ஒரு வல்லரசாக​ இருக்கிற​ போது , தமிழ்நாட்டின் உணர்வுகளை  கட்டாயம்...கவனத்தில் எடுத்திருக்கவே வேண்டும் . ஐரோப்பிய​ நாடுகள் இன்னமும் கூட​ காலனிப்போக்கிலிருந்து  விடுபடாத  அரைக்காலனி நாடுகள்  . ஆயுதங்களைக் கொடுத்து , அவற்றைக் கொட்டி எந்த மக்கள் அழிவதைப்பற்றியும் கவலைப் படாதவை . சிவப்பு  ஓநாய்கள் ...இவை தாம் பெரும் பிரச்சனை . நாடுகள் , நகரங்களை முட்டாள்தனமாக​ அழிபட​ விடவேக் கூடாது . . குறிப்பாக​ அரசியல் நலன்கள் உறவுகளை சொந்த​ மக்களை காயப்படுத்துறதாக​ இருக்கக் கூடாது . தேர்த்தல்களில் தோற்கிற​ அரசியல் கட்சிகள் ​ சக்திகள் தாம் . அவற்றின் பலவீனங்களை எந்த​ புத்தர் வந்து திருத்தப் போறோரோ?  .        

இயக்கத்திற்கு இன்னொரு பெயரும் வைத்துக் கொள்ள​ வேண்டியது அவசியம் .வேல்முருகு , புனைபெயராக​ செவ்வேலின் பெயரை சுருக்கி 'சேவல் ' என வைத்துக் கொள்கிறான் .  கிராமத்து தோழன் ' சலீம் ' என​ பெயர்  வைத்திருக்கிறான் . எனவே இவன் ' யேக்கப் ' என​ வைத்துக் கொள்கிறான் . சைவப்பெயர் அயலவருக்கு எளிதாக​ ஞாபகத்தில் இருக்கும் . ஆனால் சேவேலுக்கு தான் அரசியல்  பற்றி சுத்தமாகத் தெரியாததே. விடுதலைப்போராட்டம் புத்தம் புதிசு . ரஸ்ய​ நாவல்கள் மூலமாக​ அறிந்ததோ  எப்பன்... கீரைக் கணக்கு அறிவு . அவை ரஸ்ய​ நாட்டின் வரலாற்றையே கூறுகிறது . இங்கத்தைய... கிடையாது  . ஈழ​ அரசு   எல்லாத்துறைகளிலும் கை வைப்பதும்  திணிப்புகள் செய்வதுமாக​ இருந்து   வருகிறது . எது நிஜம்   எதுபொய் எனத் தெரியாது  மூழ்கி போய்க் கொண்டிருக்கிறோம்  .  தமிழர் உரிமையெல்லாமே அவர்களுக்கு பயங்கரவாதமாகத் தெரிகிறது . மறுதலையாக​ இவர்களுக்கு முழு ஆட்சியுமே  பயங்கரவாதமாக​ பிடறியில் அறைகிறது . அவர்களிடம் ''பண்ணிப்பாருங்கள்   பன்றிப்பயல்களே ! '' என்ற​ மாதிரியான​ தில்லான​ பேச்சுகள் . அதிகாரம் சண்டித்தனம் புரிகிறது . ஒன்றைப் பார்த்தீர்கள சாதி உட்பட​ எல்லாமே எழுதப்பட்ட​ , எழுதப்படாத​ சட்ட​ விதிகளையே கொண்டிருக்கின்றன​ .  'பேசுற​ போது '' நான் திறம் நீ பிழை '' என்ற  மாதிரியே பினாத்துகிறது. வெளிப்பார்வையில்  அதிகாரத்தில் இருப்பவரே உத்தமராகத் தெரிகிறார்  .  

மொழி மண்ணாங்கட்டி  .  அது இந்தியைப் போல​ ஆங்கிலத்தை  போல  திணிக்க​ வாய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கிறது . அம்மொழியில் பேசாமல் இந்த​ ஜென்மங்களால் தொடர்பு கொள்ளவே  முடியாதா​ ? .

எங்கே எத்தனை மொழி இருக்கின்றது என்பது முக்கியமில்லை . வரலாறை எங்கே இருந்து தொடங்குவது ? பேச்சு , எழுத்துச்சுதந்திரம் இரண்டையும் பயங்கரவாதமாக​ தடை செய்தே இவை அரங்கேறுகின்றன​ . அதிகமான​ பத்திரிக்கையாளர்களை கொல்கிற​ நாடு இது . ஒளியில்லாது  இருட்டுக்கடலில் கிளித்தட்டு கணக்கில் ஓடி தப்பி வருகிற​ தோணிகளிலே கடிதங்கள் வருகின்றன​ . பிரச்சனைகளில் சிக்குறவற்றில் ...கடிதம் கடலில் எறியப்பட்டு விடுகிறது . செந்தாமரைக்கு வருபவை இவனிடமே வந்து சேரும் . எந்த​ நேரத்தில் என்றாலும் உடனேயே கொண்டு சென்று சேர்த்து விடுவான் . தடை எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்குமே தெரியாது . கடிதமே தோழர் உயிருடன் இருப்பதை நிறுபிக்கும்  .பலவித​ குழப்ப​ நிலமைகள் கடந்து போயின​ . அச்சமயம் தான் பூஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் . அமைதி ஒப்பந்தம் எழுதப்படா விட்டால் இவர்களும்  சாவைத் தழுவி இருப்பார்கள் . விடுவிக்கப்பட்ட​ குட்டியன் இவன் தங்கி இருந்த​ லொட்ஜூக்கு தோழர்களைச் சந்திக்க​ வந்திருந்தான் . அவர் முன்னாள் சங்கானைத் தலைவர் . சுழிபுர​ சுற்றிவளைப்பில் ....சென்றவர் .'' எனக்கும் குட்டிமணி போல​ அவலச்சாவே , என​ நினைத்திருந்தேன் ' என்றார் . இதுவெல்லாம்  வெளியாருக்கு சொன்னாலும் புரியாது .

இந்தியனாமி இருந்த​ போதிலும் ​ சகோதரக் கொலைகள் நடந்து கொண்டேயிருந்தன​ . பெரும்பாலும் கொழும்பில் , யாழுக்கு வெளிப்பகுதியிலே தேவையில்லாச்  சாவுகள் . யார் கேட்பது ? . பலி தீர்க்கும் முகமாய் இந்தியன் ஆமி  நடத்தியவை  ஒருபுறம், எந்த​ படையுமே தியாக சேவைப்புரிவதில்லை என்பதை தெரிய​ வைத்தது . அந்நேரத்திலே , கதிரேசுப்பிள்ளையின் உடல்நிலை மோசமான​ போது வேல்முருகு கிராமத்திற்கு வந்திருக்கிறான். கொள்ளி வைத்த​ கையோடு திரும்பி விட்டான் . தங்கச்சியும் அம்மாவும் கிராமத்தை விட்டு விலகி யாழில் ...இருந்தார்கள் . செவ்வேல் கொழும்பில்  இருந்தான் , செவ்வேல் ,சுமார்  ...  இரண்டு வருடம்  இருந்திருக்கிறான் . கொழும்பே தெரியாதவன் ...அவ்விடத்தையும் பார்த்து விட்டான் . யாழில் கழுகின் அட்டகாசம் . இங்கே சிங்களக் ​ கிளர்ச்சி அமைப்பின் அட்டகாசம் நிலவின​ . பட்லந்த​ முகாம் கொடுமைகள் எல்லாம் நிறைவேறிய​ காலம் . யாழ் அவலங்களுக்கு ஒருவர் இருந்தது போல​ இதற்கும் ஒருவர்  இருந்தார் . இவ்விரு அமைப்புகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு கழுகு இந்த​ ஒருவரை கொன்றிருக்கலாம் என​ அவனுக்கு தோன்றுகிறது . மாறுபட்ட​ கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் சிங்கள​ கிளர்ச்சி அமைப்பு தான் நம்மவர்களுக்கு துரோரணராக​ இருந்தது . இவ்விரு அமைப்புகளிற்கிடையிலும் அநுதாப​ அலைகளும் இருந்தன​​ . ' கலவரங்களில் பங்கு பற்றாத​ சிங்கள​ இளைஞர்கள் இவ்வணியினர் ' என இவர்களை தமிழ்த்தரப்பு நம்புகிறது . ஒரு அரசாங்கம் தன் இரு பிள்ளைகளையும் கொடூரமாக​ கொல்கிறது . பிள்ளைகளுக்கிடையில் நேசம் எழுவ​து இயல்பு தானே !

பிறகு , புலப்பெயர்வு . ' வேல்முருகை சந்திப்பான் என்று  நம்பவில்லை . அவனுக்கும்  அயல் நாடு ஒன்றில் அகதியாக​ தங்க​ லொத்தரில் அனுமதி கிடைத்திருந்தது . இந்த​ நாட்டுக்கு அயல் நாடு தான் . தொடக்க​த்தில் ,  ஒருமுறை வேல்முருகு இந்த​ புல​ நாட்டிற்கு , சமறியில் இருந்த​ சயந்தனிடம் வந்த​ போது ... ...நீண்ட , நீண்ட​ வருசத்திற்குப் பிறகு சந்தித்தான் . துண்டுபட்ட​ நட்பு பெரிதாக​ ஒட்டவில்லை . இருந்தால் என்ன​, ' நட்பை விட ​பெரியது தோழன் '  என்ற​ புதிய​ பந்தம்  ,  நினைப்பு இருவர் மனதிலும் கிடக்கிறதே . ' அகதி' என்ற​ நிலை பலவித​ பாதிப்புக்களைக்  கொண்டது .  எதுவுமே நம்நாட்டை , கிராமத்தைப் போல​ வராது . இரண்டு நாடாக​ பிரியா விட்டாலும் , குறிந்தபட்சம் சுயாட்சி மிக்க​ மாகாணங்களாகவாவது​ பிரிந்து  நம் கால்களில்  தங்கி நிற்கும் சக்தி மிக்க​நிலை பிறக்காதா ?  . ஜனநாயகம் தான் சுதந்திர​ தாகம் .  இங்கே  , ' ஜனநாயகம் கிடைக்க​ மாட்டாது என்பது  தான்  நிதர்சனம் . ' மதம் ' பிடித்த​​ இனப்பிரிவுவாதம் ஒழியப் போவது என்று ? .

தென்னாபிரிக்காவை விடுவித்த​ நெல்சன் மண்டேலாவின் பாதை தான் நமக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது . அவர் ஆங்கிலக்கல்விக்( பிரீட்டீஸ்) கொள்கையையும் எதிர்த்தார் . இலங்கையிலும் தமிழ்க்கல்வி தமிழரிடமே கொடுக்கப்படவில்லை . ''இனவாதத்தை வெறுக்கிறேன்  . எங்கே இருந்து தோன்றினாலும் இனவாதம் காட்டுமிராண்டித்தனமானது  '' என்று முழங்கினார் . அடக்குமுறையாளருக்கும் , அடக்கப்படுறவர்களுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த​ உண்மையும் , நல்லிணக்கப்பாடான​ ஆணைக்குழு ( Truth and Reconciliation commission)   )அமைத்து பழிவாங்கலை தவிர்த்து அறிந்து மன்னித்து வாழ்வதே சிறந்த​ முறை '' என​ வழியையும் கூறியிருக்கிறார் .

தற்போது அவனின் சா செய்தி வர​​ , தமிழ்வின் தளத்தில்  ...அவனுடைய​ அறிவித்தலைப் பார்த்தான் .  அவனின் சிரிப்பு மாறவில்லை , அப்படியே இருக்கிறான் . கடந்தவையை அப்படியே அவன் மீது வாரி இறைத்து விட்டிருக்கிறது . அவன் மீளவும் கனவுகளில் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறான் .

அகதியாய் உதிர்ந்து கொண்டிருப்பவர்களின் வேதனைகளை யார் தான் அறிவாரோ ? தர்மம் மறுபடியும் வெல்லும் . .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.