“நேற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும். செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில், தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும். “ இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் அவர்கள் வெளியிட்டிருந்த சத்தியம் மீறியபோது என்ற கதைத்தொகுதி பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தபோது குறிப்பிட்டிருந்தேன்.  தற்போது வி. எஸ். கணநாதன், நிம்மதியைத் தேடி என்ற மற்றும் ஒரு கதைத்தொகுப்பினை வரவாக்கியுள்ளார்.

கிழக்கிலங்கை மகுடம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கான முகப்போவியத்தை மெல்பன் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்துள்ளார்.

“ இன்று சிறுகதைகளின் வடிவ உத்திகள் பல்வேறு தளங்களில் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், கணநாதன் தனது கதைசொல்லும் உத்தியாக வாசகர்களுடன் உரையாடுவது போன்ற வடிவத்தை தன் எழுத்து நடையாக மாற்றியுள்ளார் “ என்று இந்நூலை பதிப்பித்திருக்கும் மகுடம் வி. மைக்கல் கொலின் குறிப்பிட்டுள்ளார்.

நிம்மதியைத் தேடி நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் வரலாறுகளையும் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டிருப்பவை.

கணநாதன், தனது வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களை, படைப்பிலக்கியமாக்கி வருபவர். ஆனால், அந்த அனுபவங்களை சந்திக்கும்போது, பின்னாளில், அவற்றை படைப்பிலக்கியமாக்கவேண்டும் என நினைத்திருப்பாரோ தெரியாது.

வாழ்வின் தரிசனங்கள்தான் ஒவ்வொரு படைப்பாளியினதும் இலக்கியப்பிரதிகள். சிலர் அவற்றை பயண இலக்கியமாக்குவர். சிலர் சிறுகதை, நாவல் என வரவாக்குவர். இன்னும் சிலர் நாடகமாக எழுதுவர். சினிமாத்துறை சார்ந்தவர்கள், திரைக்கதை எழுதி திரைப்படமாக்குவர்.

                                      - எழுத்தாளர் வி.எஸ். கணநாதன் -

 

கணநாதன் தேர்ந்த வாசகர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து வாசிப்பவர். அந்த வாசிப்பு அனுபவம் அவர் பெற்ற புத்திக்கொள்முதல். அத்துடன் மற்றும் ஒரு சிறந்த வாசகியான சகுந்தலாவை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவியரசு கண்ணதாசன். “ கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் “ என்றும் கண்ணதாசன் எழுதத்தவறிவிட்டாரே என்ற கோபம் எனக்கு கண்ணதாசனிடத்திலுண்டு !

இந்த இலக்கியத்தம்பதியர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திலும் இணைந்திருப்பது நாம் செய்த பேறு !

மொத்தம் பன்னிரண்டு கதைகளைக்கொண்டதுதான் கணநாதன் அவர்களின் புதிய நூல் நிம்மதியைத்தேடி.

வாழ்வில் நிம்மதியைத்தேடித்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைபேருக்கு அவர்கள் தேடிய நிம்மதி கிடைக்கிறது. கிடைத்தாலும், அதிலும் திருப்தி கிட்டாமல், மீண்டும் நிம்மதியைத் தேடி ஓடுவார்கள்.

அதனால்தானோ என்னவோ, கவியரசு கண்ணதாசன் எமக்காக மற்றும் ஒரு பாடல் வரியையும் விட்டுச்சென்றுள்ளார்:

“ உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு “

கணநாதனின் நிம்மதியைத்தேடி தொகுப்பின் முதல் கதை, என் முப்பத்தொரு நாள் கடல் பயணம் என்ற உண்மைக்கதையை பேசுகிறது.

1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரபு – இஸ்ரேல் போர்க்காலத்தின்போது, இங்கிலாந்தில் பணி நிமித்தம் வாழ்ந்த கணநாதன், தனது தாயகமான இலங்கைக்கு செல்லப்புறபட்டபோது, வான்வழியாக செல்ல முடியாமல், கடல் மார்க்கமாக, 31 நாட்கள் பயணித்த கதையை பேசுகிறது.

எமக்கு, 1912 ஆம் ஆண்டு வடஅயர்லாந்திலிருந்து புறப்பட்ட ஆர். எம். எஸ்.  டைட்டானிக் (RMS Titanic) வட அத்திலாந்திக் பெருங்கடலில் பெரிய பனிப்பறையில் மோதி, 1503 பேர் ஜலசமாதியான அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கணநாதன் நினைவூட்டுகிறார்.

1997 இல் வெளிவந்த டைட்டானிக் (Titanic)  திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.

கணநாதன் அவர்கள் 1967 இல் புறப்பட்ட கப்பல், நடு இரவில் நடுக்கடலில் சூறாவளியால் தள்ளாடியபோது, அதில் பயணித்தவர்களின் மனநிலையை சொல்கிறார்.

அதேசமயம், பகல்பொழுதில் அந்தக்கப்பலில் கிடைக்கும் உல்லாசத்தையும் ( மது, உணவு, ஆட்டம் பாட்டம் ) பற்றிச் சித்திரிக்கிறார்.

கண்டதும் காதலாகுமா என்ற கதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பட்டினப்பள்ளி என்ற தமிழக விவசாயக் கிராமத்து மக்களின் கதையை பேசுகிறது.

அந்தக்கிராமத்து மக்களிடம் வரி அறவிடும் மன்னனின் சேவகனுக்கும் கிராமத்துப்பெரியவரின் பேத்திக்கும் இடையில் மலரும் காதலைச்சொல்ல வரும் இக்கதை, திருக்குறள் சார்ந்த பட்டிமன்றமாகவும் நகருகிறது.

பாட்டி சொல்லைத்தட்டாதே என்ற கதை புகலிடத்தில் வாழும் மூன்று தலைமுறையினரின் வாழ்வுக்கோலத்தை சித்திரிக்கிறது. தலைமுறை இடைவெளிபற்றி பேசும் கதை. இங்கு பாரதியாரின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

சிறைவாசத்தில் உருவான வழக்கறிஞன் என்ற கதையும் உண்மைச்செய்தியின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது.

கைதியாக சிறைப்பட்டவர், சிறையிலிருந்தவாறே சட்டம் படித்து தனக்கு எதிரான வழக்கை எதிர்கொண்டு 15 வருட சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானவரின் கதை. இது வட அமெரிக்காவில் புரூக்ளீனில் நடந்திருக்கிறது.

நெல்சன் மண்டேலாவின் Long walk for freedom 751 பக்கங்கள் கொண்ட வாழ்க்கைச்சரித நூலின் உள்ளடக்கத்தை படித்து அதனை எளிமையாகவும் சுருக்கமாகவும் தருகிறார் கணநாதன்.

நெல்சன் மண்டேலா என்ற பெருந்தலைவர் வாழ்ந்த காலம் 1913 – 2013 . தென்னாபிரிக்காவின் அதிபராக அவர் பதவியேற்ற பின்னர், நோபல் விருதும் பெற்றவர்.

சாந்தாராம் என்ற மற்றும் ஒரு 936 பக்கங்கள்கொண்ட உண்மைச்சம்பவங்களின் தொகுப்பான மற்றும் ஒரு நூலையும் முழுமையாகப்படித்து, அதன் சாரத்தையும் எளியநடையில் கணநாதன் நமக்குத்தந்திருக்கிறார்.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தைச்சேர்ந்த கிரகரி டேவிட் ரொபர்டின் வாழ்க்கைச்சரிதமே சாந்தாராம்.

கணநாதன் மேற்குறித்த நூல்களை மொழிபெயர்ப்புச்செய்யவில்லை. தான் இவற்றுள் கற்றதையும் பெற்றதையும் தனது மொழிநடையில் ஒரு கதைசொல்லிபோன்று பதிவுசெய்கிறார்.

படைப்பூக்கத்துடன் எழுதுகிறார். அதற்காக அவர் எடுத்துக்கொண்டிருக்கும் நேரம் மிகவும் பெறுமதியானது.

இவ்வாறு புகழ்பெற்ற மனிதர்கள், மற்றும் சாதனையாளர்களின் சுயரிதையை படித்து, தமது மொழிநடையில் எளிமையாக வாசகர்களிடம் எடுத்துச்செல்பவர்கள் நம் மத்தியில் அபூர்வம்.

அதனால் கணநாதன் அவர்கள் ஒரு அபூர்வ எழுத்தாளராகவும் இனம் காணப்படுகிறார்.

அவுஸ்திரேலியாவில் வதியும் கணநாதன், எங்கோ தொலைதூரத்திலிருக்கும் கொல்லிமலை பற்றியும் எழுதுகிறார். நெதர்லாந்து பற்றியும் தென்னாபிரிக்கா பற்றியும் இலங்கை பற்றியும் எழுதுகிறார்.

ஒரு காலகட்டத்தில் தான் பயணித்த நாடுகளில் பெற்ற அனுபவங்களை காலம் கடந்து கதைகளாக்க முயன்றுள்ளார். இந்த வயதிலும் வாசிக்கிறார். தொடர்ந்து எழுதுகிறார்.

இன்றைய தலைமுறை படைப்பாளிகளுக்கு கணநாதன் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

தனது அருமத்துணைவியார் சகுந்தலா அம்மையாருக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்நூல் வாசகர்களுக்கு புத்தம் புதிய அனுபவங்களைத் தரும்.

எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி , ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2- 30 மணிக்கு மெல்பனில் Victorian Tamil Community Centre ( 40, Lonsdale Street, Dandenong, Vic – 3175 ) மண்டபத்தில் பேராசிரியர் இலியேசர் நினைவு மண்டபத்தில் நடைபெறும்.

இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.